சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை கடிதம் எழுதி உள்ளது.
சுதந்திரம் என்ற பெயரில் கண்ணியக்குறைவான ஆடைகளை அணியக் கூடாது. அவற்றை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கல்லூரிகளில் பெண் விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உடை கட்டுப்பாட்டை அமலாக்க முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் பாடம் நடத்தும்போது பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சேலை அணிந்திருநாதால் அதனால் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது.
இரு பாலினத்தவரும் படிக்கும் கல்லூரிகளில் கவனச் சிதறல் ஏற்பட இது வழி வகுக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இப்பின்னணியில் பெண் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உயர் கல்வித்துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
இதுதொடர்பான உத்தரவு சம்மந்தப்பட்ட பேராசிரியைகள் மற்றும் விரிவுரையாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
அரசு தரப்பின் அறிவுறுத்தலில் "டீசண்ட் டிரஸ்கோடு" என்ற வாசகம் தான் இடம் பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்களின் சங்கத்தலைவர் டி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடங்களில் மாணவ,மாணவிகளுக்கு சீருடை கட்டுப்பாடு உள்ளது. பல கல்லூரிகளிலும் உடை கட்டுப்பாடு உள்ளது. கல்லூரி பெண் விரிவுரைவாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பெருமளவு உடை கட்டுப்பாடு இல்லை. இருப்பினும் பல கல்லூரிகளில் அறிவிக்கப்படாத உடை கட்டுப்பாடு உள்ளது என விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.