காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் தற்காலிக நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி அறிவித்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, 'சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் அளித்த பதில் ஏற்புடையதாக இல்லை. 15 நாள்கள் அவகாசம் வேண்டும் என்று அவர் கோரியது ஏற்கத்தக்கதாக இல்லை.
அவர் மீண்டும் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை அவர் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்' என்று தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை சத்யமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார், நாங்குநேரி தொகுதியின் 8 ஒன்றியத் தலைவர்களை நீக்கி அவருடைய ஆதரவாளர்களை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்தில் ஏற்பட்ட மோதலுக்கு நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன்தான் காரணம் என்று கூறி அவரைக் கட்சியில் இருந்து நீக்கவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.