12 மாவட்ட சிறைகளில் ரூ. 2.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருவழிக்கண்ணாடியுடன் கூடிய சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2022) தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 2 கோடியே 51 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில், குற்றம் இழைத்து சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் மீதான குற்றத்தினை சாட்சிகள் வாயிலாக நிரூபித்திடும் வகையில் காவல்துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்டிட, மத்திய சிறைகளில், நீதித்துறை நடுவர் மற்றும் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக்கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, 13 மாவட்ட சிறைகளில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையும் படிக்க.. மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில் அவசரம் ஏன்?
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் – பேரூரணி, கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில், விருதுநகர் மாவட்டம் – விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டம் – இராமநாதபுரம், சேலம் மாவட்டம் – ஆத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் – வேடம்பட்டு, தேனி மாவட்டம் - தேனி, திருப்பூர் மாவட்டம் – திருப்பூர், தருமபுரி மாவட்டம் – தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டம் – கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 12 மாவட்டச் சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டின் மாவட்டச் சிறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.