மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில்  அவசரம் ஏன்?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை இவ்வளவு நெருக்கடி கொடுத்து சிக்கலாக்கியிருப்பது ஏன் என்பதுதான் மக்கள் மத்தியில் ஆயிரம் வோல்ட் மின்சாரமாக ஷாக் அடிக்கிறது.
மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில்  அவசரம் ஏன்?
மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பில்  அவசரம் ஏன்?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன.

ஆனால், இந்த நடைமுறையை இவ்வளவு நெருக்கடி கொடுத்து  சிக்கலாக்கியிருப்பது ஏன் என்பதுதான் மக்கள் மத்தியில் ஆயிரம் வோல்ட் மின்சாரமாக ஷாக் அடிக்கிறது.

மின் கட்டண உயர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியை மக்கள் வெளிப்படுத்துவதற்குள் அவர்களை ஆதார் எண்ணை இணைக்குமாறு அலைக்கழிப்பது, மக்களை திட்டமிட்டு திசைதிருப்பும் நோக்கமோ என்று, ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் திண்டாடும் மக்களின் கூக்குரலாக வெளிப்படுகிறது.

இன்று இணைக்காவிட்டால், நாளை, நாளை இல்லையேல் நாளை மறுநாள் இணைத்துத்தான் ஆக வேண்டும். மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் அனைவருமே நிச்சயம் ஆதார் எண்ணை இணைக்கத்தான் போகிறார்கள். அப்படியிருக்க ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணமே செலுத்த முடியும் என்று நெருக்கடி கொடுப்பதும், மின் கட்டணம் செலுத்த முடியாமல் எங்கே அபராதம் செலுத்துவதும், பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்றும் மக்கள் பரிதவிப்பதும் எதற்காக ஏற்படுத்தப்படும் நெருக்கடி?

தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு, நேரடியாக, இணையதளம் வாயிலாக, செயலிகள் வாயிலாகவும் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது.

இவ்வாறிருக்க, நேரடியாக மின் கட்டணம் செலுத்துவோர், கட்டணம் செலுத்த வரும்போது ஆதார் அட்டை நகலைக் கொடுத்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துவோருக்கும் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்பவர்களும்கூட, அனைத்து மின் இணைப்புக்கும் ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்யலாம். 

ஒருவேளை வாடகை வீட்டில் குடியிருந்து மின் கட்டணம் செலுத்துவோரும், அந்த மின் இணைப்பு எண்ணுடன் தங்கள் ஆதார் எண்ணையும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

3 கோடி மின் இணைப்புகளில், இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாக் அடிக்க வைக்கும் குழப்பங்கள்!

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்போர் அனைத்துக்கும் ஒரே ஆதார் எண்ணைப் பதிவு செய்வதால், ஏதேனும் சிக்கல் வருமோ என்று குழம்புகிறார்கள்.

100 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பயன் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்குப் பிறகு, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களது வீட்டுக்கான 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ரத்தாகிவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

வாடகைக்கு இருப்பவரின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் சேர்க்க, வீட்டு உரிமையாளர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், வாடகை இருப்பவர் வேறு வீடு மாறும்போது, ஆதார் எண்ணை மாற்றும் வாய்ப்பு இருக்குமா? இருக்கும்பட்சத்தில் அதனை எளிதாக செய்ய முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றியெல்லாம் எவ்வித விளக்கத்தையும் மின்வாரியம் அளிக்கவில்லை. 

இதுபோன்ற பல்வேறு சந்தேகம் மற்றும் குழப்பங்களால்தான், பலரும்  தங்களது ஆதார் எண்ணை இணைக்கத் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில்தான் ஆதார் எண் இணைப்பைத் துரிதப்படுத்தும் வகையில் மின்வாரியம், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்ற வகையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்தது.

இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்றவர்கள், ஆதார் எண்ணை இணைக்கச் சொன்னதால் குழப்பமடைந்தனர். வாடகைக்கு குடியிருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமலும், வாடகை தாரரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கல் ஏற்படும் என்று தெரியாமல் வீட்டு உரிமையாளர்களும் குழப்பமடைந்தனர்.

செயலிகள் வாயிலாக மின் கட்டணம் செலுத்த முயல்பவர்களுக்கும், ஆதார் எண்ணை இணைக்குமாறு குறுஞ்செய்தி அனுப்ப அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதிருப்தியில் பயனாளர்கள்

ஆதார் இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது பற்றி தெரியாத, கடைசி அல்லது ஓரிரு நாள்கள் காலக்கெடு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த முயன்றவர்கள், மின் கட்டணம் செலுத்த முடியாமல், ஆதார் உள்ளிட்ட புகைப்படங்கள் கணினியில் இல்லாததாலும் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

கடைசி நாளுக்குப் பிறகும் ஆதார் எண் இணைக்க முடியாமல் கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படுமா? இல்லை இந்த மாதம் அபராதம் வசூலிப்பது தவிர்க்கப்படுமா?

உரிய காலக்கெடு முடிந்த பிறகு கட்டணம் செலுத்தாமல் இருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சமடைந்திருக்கும் மக்களுக்கு எந்த விளக்கமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஏன் ஒரு மின் இணைப்பு எண்ணுடன் - ஆதார் எண்ணை இணைப்பதற்கு இந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், உரிய கால அவகாசம் அளித்து எளிதாகவே இதனைச் செய்யலாமே என்பதுதான் மக்கள் தொடர்ந்து எழுப்பும் கேள்வி.

மறுபக்கம் தொழில்நுட்பக் கோளாறு வேறு

சிலருக்கு ஆதார் எண் இணைத்த பிறகும் மின் கட்டணம்  செலுத்த  முடியவில்லை என்பது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளும் மக்களை துயரத்தில் ஆழ்த்துகின்றன. உரிய வழிகாட்டுதல்கள்படி அனைத்தையும் பதிவு செய்த வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஆதார் எண் இணைப்பில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வருகிறது. 

அதாவது, ஆதார் இணைப்பு பதிவு ஏற்கப்படவில்லை. மீண்டும் முயற்சிக்கவும் என்றோ, ஆதார் எண் இணைத்த பிறகும், மீண்டும் ஆதார் எண்ணை இணைக்கும்படி தகவல் வருவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்து மின் வாரியம் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஆதார் எண்ணை இணைத்த உடனே மின் கட்டணத்தை செலுத்த முடியாது. இணையதளம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும் போது, அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகே இணைப்புப் பணி முழுமையடையும். 

இதற்கு சில நாள்கள் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், மின் வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதார் எண்ணை இணைக்கும்போது உடனடியாக இணைப்பு மேற்கொள்ளப்படும் என்கிறார்கள்.

அவசரம்.. அவசரம்..

ஒரு தெளிவான வழிகாட்டுதலுடன் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறைகளை மின்வாரியம் மேற்கொண்டிருக்கலாம்.

கால அவகாசம் கொடுத்து மக்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல், இப்பணியை செய்திருக்கலாம். செய்யலாம்.

உடனடியாக ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, இரு பணிகளையும் எளிதாக்கலாம்.

இந்தக் கட்டாயம் எப்போது வந்திருக்க வேண்டும்?

ஆதார் எண்ணை இணைக்க போதிய கால அவகாசம் கொடுத்து, பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, அதுவும் முடிந்து போயிருந்தால், அப்போது வேண்டுமானால், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்ற கெடுபிடியைக் கொண்டு வந்திருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே கெடுபிடி செய்திருப்பதுதான் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. 

ஏன் இந்த அவசரம்? எதற்காக இத்தனை நிர்பந்தம்? இத்தகைய நெருக்கடிகள் மக்களால் வரவேற்கப்பட மாட்டா என்பதுடன் பெரும் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com