சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் இரண்டு வகை குப்பைத் தொட்டிகளை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 78,136 கடைகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரு வகையாக பிரித்து குப்பைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 26,242 கடைகள் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி வருவதாகவும், மீதமுள்ள கடைகளும் இதுபோன்று தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.