234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சரிடம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்று  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
234 தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம்: மு.க. ஸ்டாலின்
234 தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம்: மு.க. ஸ்டாலின்


சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்று  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (15.10.2022) சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆற்றிய உரையில், இந்த நிகழ்ச்சி இன்றைக்கு இந்த புதுக் கல்லூரியில், அதுவும் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில், நம்முடைய மத்திய சென்னையில் அடங்கியிருக்கக்கூடிய இந்தத் தொகுதியில், நடக்கிறது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை எண்ணி, நாங்களும் மகிழ்ச்சியோடுதான் கலந்து கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் துவக்கத்தில், எப்போதும் அமைச்சர்கள் தான் வேண்டுகோள் வைப்பார்கள் முதலமைச்சரிடத்தில். நான் இப்போது அமைச்சரிடத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கப் போகிறேன். என்னைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர் தொகுதி, அந்தத் தொகுதியில் நீங்கள் விரைவாக நடத்தவேண்டும். அந்த வேண்டுகோளை, அந்தத் தொகுதியின் சார்பில், உரிமையோடு நான் இந்த நேரத்தில் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

நான் மட்டுமல்ல, சேகர்பாபுவினுடைய துறைமுகத் தொகுதியிலும் நடத்த வேண்டும். ஆகவே, எங்களுடைய இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல, ஏற்கனவே, வேறு வேறு இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். 234 தொகுதியிலும் நீங்கள் நடத்தவேண்டும் என்பது தான் முதலமைச்சர் என்கிற முறையில் நான் வைக்கக்கூடிய வேண்டுகோள். அதை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.

உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற பணி வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் அதற்கான என்னுடைய வாழ்த்துகளை இப்போதே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த வேலைவாய்ப்பு முகாம் எனக்கு மிகவும் திருப்திகரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இந்த வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைக்குமாறு என்னை மட்டுமே அழைக்காமல், ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை கொடுக்க வைக்கக்கூடிய அந்த வாய்ப்பையும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில் தான் ரொம்ப, ரொம்ப பெருமையாக இருக்கிறது.

இதை விட ஒரு அரசாங்கம் நடத்துகிற முதலமைச்சருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது? என்று முதல்வர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com