“மக்கள் நோய், நொடி இன்றி வாழ அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்” என அரக்கோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரவி வேண்டுகோள் விடுத்தார்.
ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் அரக்கோணத்தில் உள்ள கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.16) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரக்கோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரவி விவசாயிகள் மத்தியில் பேசுகையில், “ஆரம்பத்தில் நாம் அனைவரும் இயற்கை விவசாயம் தான் செய்து கொண்டு இருந்தோம். இடையில் விளைச்சலை அதிகரிப்பதற்காக ரசாயன விவசாயத்திற்கு மாறியுள்ளோம். தற்போது மீண்டும் பழைய படி இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். காரணம், ரசாயன உரங்களின் பயன்பாட்டில் தான் ரத்த கொதிப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் வருகின்றன. எனவே, இது போன்ற நோய், நொடிகளில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று ரவி கூறினார்.