/

அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றிய விவகாரம்: கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

அம்பேத்கர் புகைப்படத்தை கல்லூரி அலுவலகத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:37 am

DIN

நாமக்கல்: அம்பேத்கர் புகைப்படத்தை கல்லூரி அலுவலகத்தில் இருந்து அகற்றிய விவகாரத்தில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய டி.பால் கிரேஸ், திண்டிவனம் ஏ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அப்போது கல்லூரி அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை அவர் அகற்ற உத்தரவிட்டதாக தெரிகிறது.

Story image

இது தொடர்பான புகார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு சென்றது. அவர் தாழ்த்தப்பட்டோர் பிரிவு கமிட்டி முன்னிலையில் விசாரணை நடத்தி டி. பால் கிரேஸ் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்தார்.

இதற்கிடையே அவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் நான்கு மாதங்களுக்கு முன் முதல்வராக பொறுப்பேற்றார். இங்கும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. பேராசிரியர்கள் தரப்பில் மனித உரிமை ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரிக் கல்வி இயக்குனரகம், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி. பால் கிரேஸை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த தகவல் அறிந்த நிலையில், அவர் கல்லூரியில் இருந்து வெளியே செல்ல மாட்டேன் என அங்கிருக்கும் பேராசிரியர்களிடம் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.