

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று (புதன்கிழமை) ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் அவ்வாறு இறக்க வாய்ப்பில்லை என்று அரசு மருத்துவமனை தரப்பிலும் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் நசரத்பேட்டையில் வசித்து வந்த கண்ணன் மனைவி கலாநிதி(64) இவர் காஞ்சிபுரத்தை அடுத்த காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். இவருக்கு சுவாசப்பிரச்சினை ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதே போல காஞ்சிபுரத்தை அடுத்த பூச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(70) அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கலாநிதியின் 2வது மகன் சீனிவாசன் கூறுகையில் என் தாயார் உணவு வாங்கி வரும்படி கூறினார். நான் உணவு வாங்கி விட்டு வருவதற்குள் அவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து விட்டார். ஆக்சிஜன் குறைந்து வருவதை ஏற்கனவே அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் கண்காணித்திருக்க வேண்டும். முறையாக கண்காணிக்காமல் கவனக்குறைவாக இருந்ததால் தான் என் தாயார் உயிரிழந்துள்ளார் என்றார்.
இது குறித்து அரசு மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியது..
அரசு மருத்துவமனையில் பைப் லயன் வழியாகத்தான் ஆக்சிஜன் செல்கிறது. ஒருவருக்கு பற்றாக்குறை என்றால் பலருக்கும் அதே நிலை தான் ஏற்பட்டிருக்கும். அதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் இருவரும் உயிரிழந்து விட்டனர் என்பது தவறு. உடல் நலமில்லாமலும், வயது மூப்பின் காரணமாகவும் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.