கிரெடிட் கார்டு பேமண்ட் கட்டத் தவறினால் என்ன நடக்கும்?

வழக்கமாக, மற்றக் கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருளுக்கான தொகையை அதற்குரிய தேதியில் கட்டுவதற்குத்தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கிரெடிட் கார்டு பேமண்ட் கட்டத் தவறினால் என்ன நடக்கும்?

வழக்கமாக, மற்றக் கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருளுக்கான தொகையை அதற்குரிய தேதியில் கட்டுவதற்குத்தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால், அதற்கு அபராதத் தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்.

ஏற்கனவே, கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலருக்கும், இதெல்லாம் தெரிந்திருக்கும். ஆனாலும், பலரும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் செலுத்தாமல் விடுவதற்கு கையில் பணமில்லாதது, மாதக் கடைசி என பல காரணங்கள் புயல் சின்னங்களைப் போல தாமாகவே உருவாகத்தான் செய்கின்றன.

கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டுகள் மீது புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை மாதத்தில்தான் பிறப்பித்திருந்தது. 

ஒரு வேளை, ஒருவர் கிரெடிட் கார்டு தவணையை உரிய நேரத்துக்குள் கட்டத் தவறினால், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி, கிரெடிட் கார்டு வழங்கும் அமைப்பு அல்லது வங்கி, உங்கள் கணக்கை கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு (சிஐசி) கடன் பாக்கி (பாஸ்ட் டியு) அட்டையாக அறிவித்துவிடும்.

கிரெடிட் கார்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அட்டையை வழங்குபவர், எத்தனை நாள்கள் காலதாமதமானதோ அந்த நாள்களைக் கணக்கிட்டு, செலுத்த வேண்டிய தேதியிலிருந்து அபராதக் கட்டணங்களையும் கணக்கிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறை சொல்கிறது.

அதேவேளையில், செலுத்தத் தவறிய தொகைக்கு தாமதமாக செலுத்தியதற்காக அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், இந்த அபராதமானது செலுத்தத் தவறிய தொகைக்கு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டுமே தவிர, கட்ட வேண்டிய மொத்தத் தொகைக்கும் வசூலிக்கப்படாது.

கிரெடிட் கார்டு வழங்குவோர், குறைந்தபட்சம் ஒரு மாத காலத்துக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பித்தான், இந்தக் கட்டணங்களில் மாற்றம் செய்ய முடியும்.

ஒருவேளை, உங்கள் கிரெடிட் கார்டு வழங்குவோர் வசூலித்த அபராதத் தொகை, வட்டி விகிதம் போன்றவை உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினால், கட்ட வேண்டிய முழு நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்திய பிறகே கிரெடிட் கார்டை வேண்டாம் என்று ஒப்படைக்க முடியும். 

இதுபோன்ற நேரங்களில், கிரெடிட் கார்டு வழங்குபவர், உங்களிடமிருந்து கூடுதலாக கட்டணமோ அல்லது கிரெடிட் கணக்கை முடிப்பதற்கான கட்டணத்தையோ வசூலிக்க முடியாது.

ஒருவர், கிரெடிட் கார்டு கணக்கை முடிக்க விருப்பம் தெரிவித்தால், ஆர்பிஐ வழிகாட்டுதல்படி, அதனை ஏழு நாள்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்பது நடைமுறை.

வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் கடன் அட்டை வரம்பை உயர்த்துவது, புதிய கடன் அட்டை அளிப்பது போன்றவற்றில் வங்கி ஈடுபடக் கூடாது.

அதுபோல, இலவச கடன் அட்டை மீது மறைமுகக் கட்டணங்கள் எதையும் விதிக்கக் கூடாது.

கடன் அட்டை தொடர்பாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் ஸ்டேட்மெண்டில், பணம் செலுத்த குறைந்தபட்சம் 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவேளை, நீங்கள் கிரெடிட் கார்டு கணக்கை முடிக்க வலியுறுத்தியும், அவர் அதனை செயல்படுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட காலத்துக்குப் பின், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 அபராதமாக கிரெடிட் கார்டு கணக்கை வைத்திருந்தவருக்கு வழங்குபவர் கொடுக்க வேண்டும்.. கிரெடிட் கார்டு கணக்கை முடிக்கும் வரை என்கிறது விதிமுறை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com