
ராணிப்பேட்டையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி, எஸ்.பி. தீபா சத்யன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளன்று லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். அன்று முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அன்றைய தினம் நாடு முழுவதும் முழுவதும் பாதுகாப்புப்பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் தலைமையில் உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து உயிரிழந்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 60 குண்டுகள் முழங்க உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள், உயிர் நீத்த காவலர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.