புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துணைவேந்தர் பிறப்பித்த உத்தரவு, பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களில் உயா்கல்வித்துறை செயலரால் வெள்ளிக்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருப்பவா் ஜி.சிவராஜ். தனது பதவியை தவறாக பயன்படுத்தியதற்காகவும், ஊழல் மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம் 2020ன் விதிகளின்படி, சட்டத்தின்படி ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கும் வரை அவரை தாற்காலிகப் பணிநீக்கம் செய்து, துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.மோகன் வெள்ளிக்கிழமை பகலில் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
தன்மீதான புகாா் தொடா்பாக ஜி.சிவராஜ் கூறுகையில், நடவடிக்கை குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், குழு விசாரணை நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே புதுச்சேரி உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை நிர்வாகம் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
துணைவேந்தரின் இடைநீக்க உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக புதுச்சேரி அரசின் உயா்கல்வித்துறை (தொழில்நுட்பம்) துறை துணைச் செயலாளர் எம்.வி.ஹிரன் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டி: ரிஷி சுனக் தொடா் முன்னிலை
பதிவாளர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஊழல் மற்றும் நிதி முறைகேடுதான் காரணம் என துணைவேந்தர் குறிப்பிட்டிருந்தாலும், தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வதற்கான எந்த காரணத்தையும் துணைச் செயலாளர் கூறவில்லை.
பல்கலைக்கழகப் பதிவாளா் மீது தாற்காலிகப் பணியிடை நீக்க அரசாணை வெள்ளிக்கிழமை பகலில் வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவு உயா்கல்வித்துறை செயலாளரால் ரத்து செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி அரசின் கல்வியாளா்களிடையே வியப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.