அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஜயங்கொண்டம் அடுத்த பெரியபாளையம் கிராமம், மேலத் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி(50). தெற்குத் தெருவைச் சேர்ந்த கலைமணி மனைவி மலர்விழி(29). சனிக்கிழமை காலை இருவரும், அருகே உள்ள தைலமரக்காட்டில் உணவு காளான்கள் பறிக்க சைக்கிளில் சென்றுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளோர் மலர்விழிக்கு கைப்பேசியில் தொடர்புக் கொண்ட போது கைப்பேசி சுவிட்ச்ஆப் என கூறியதையடுத்து, அவர்கள் சென்ற பகுதிக்கு குடும்பத்தார் சென்றுள்ளனர்.
அங்கு தைலமரக்காட்டின் சாலையோரத்தில் சைக்கிள் நின்றுள்ளது. இதையடுத்து, காட்டினுள் சென்று பார்த்த போது, 2 பெண்களும் முகம் சிதைந்த நிலையில், அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அணிந்திருந்த தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நகைக்காக கொலை செய்யப்பட்டனரா? வேறு ஏதும் காரணம் உண்டா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு
இச்சம்பவ இடத்தில், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.