வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை 'சித்ரகாங்' புயல் கரையை கடந்தால்தான் கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெர்வித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், அது ஞாயிற்றுக்கிழமை மாலை புயலாக மாறி தீவிரமடைந்தது.
அந்தப் புயல் வங்கதேசத்தின் வடமேற்கில் இருந்து வடகிழக்கு திசையில் செல்லும் நிலையில், அந்நாட்டின் டிங்கோனா தீவு மற்றும் சந்த்விப் பகுதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்க உள்ளது.
இந்தப் புயல் காரணமாக, ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் திங்கள்கிழமை மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பரவலான மழை, மாநிலத்தில் தீபாவளி மற்றும் காளி பூஜை கொண்டாட்டங்களில் உற்சாகத்தை குறைக்க்க கூடும்.
கொல்கத்தாவில், 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், இதனால் காளி பூஜை கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சந்தைகள் பாதிக்கப்படலாம்.
எவ்வாறாயினும், கொல்கத்தாவில் உள்ள பிரபலமான காளிகாட், தக்ஷினேஸ்வர் மற்றும் தாந்தானியா ஆகிய காளி கோவில்களுக்கு அதிகாலை முதல் திரளாக வந்த பக்தர்களின் உற்சாகத்தை காலை பெய்த மழையால் தணிக்க முடியவில்லை.
மேலும், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் உள்ள சுந்தர்பன் பகுதி சூறாவளி புயலால் கடுமையாக பாதிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் மற்றும் அதிக அலைகள், கட்சா அணைகள் மற்றும் சாலைகளை சேதப்படுத்தலாம் மற்றும் இப்பகுதியில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை பாதிக்கப்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தீபாவளி: தமிழகத்தில் 2 நாள்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை
மேலும், சித்ரகாங் புயலால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுந்தர்பன் பகுதியில் படகு சேவைகள் மற்றும் கடலோர ரிசார்ட் நகரங்களான திகா, மந்தர்மோனி, ஷங்கர்பூர், பக்காலி மற்றும் சாகர் ஆகிய பகுதிகளிலும் படகு சவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
'சித்ரகாங்' புயல் காரணமாக, வழக்கமாக அக்டோபர் மாதம் 3 ஆவது வார இறுதிலேயே அல்லது 4 ஆவது வார தொடக்கத்திலோ தொடங்கும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதமாகி உள்ளது.
இந்த புயல் கரையை கடந்த பின்னர்தான், வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கத்தைவிட ஒரு வாரம் தாமதமாக, நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை (அக்.23) விடைபெற்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.