பசும்பொன் தேவர் தங்கக் கவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது என்றும், எந்த தனிநபருக்கும் சொந்தமானதல்ல எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மாமன்னர்கள் மருது சகோதரர்களின், 221 வது நினைவு நாளையொட்டி மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, அண்ணன் , தம்பி பாசத்திற்கும் நட்பிற்கும் உதாரணமாக தன் உயிரை நீத்த மருது சகோதரர்களின் நினைவு நாள். அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தி உள்ளோம்.
அதிமுக சார்பில், மருது சகோதரர்களின் நினைவிடம் அமைத்தது, அரசு விழாவாக அறிவித்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான்.
அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தி வருகிறோம். வேறு எந்த கட்சிக்கும் இந்த பெருமை இல்லை. பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அப்போது அதிமுக பொருளாளராக யார் இருக்கிறார்களோ, அவர்களே தங்கக் கவசத்தை பெற்று ஒப்படைக்க வேண்டும் என்ற வகையில் ஏற்பாடு செய்திருந்தார்.
படிக்க | கோயம்பேடு சந்தை நாளை இயங்காது
கடந்த 2015ஆம் ஆண்டு இது போன்ற கட்சியில் பிரச்னை ஏற்பட்ட போது, ராமநாதபுரம், மதுரை மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
அது போன்ற நிலை தற்போது இல்லை. தற்போது நிலையில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். பிற வங்கிகளில் அதிமுக வங்கிக் கணக்கை தற்போதைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நடைமுறைபடுத்தி வருகிறார்.
பசும்பொன் தேவர் தங்கக் கவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்து செல்லலாம். தங்கக் கவசம் எந்த தனி நபருக்கும் சொந்தமானது அல்ல.
தமிழகத்தில் உள்ள முக்குலத்தோர் சங்க நிர்வாகிகள் சென்று, பசும்பொன் தேவர் அறக்கட்டளை பொறுப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
தற்போது தேவர் தங்கக் கசவசம் யார் பெறுவது என்பது குறித்து வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி நடுநிலையோடு செயல்படுவோம் எனக் கூறினார்.