
ரயில் நிலைய அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் ரயில் நிலைய மாஸ்டராக அஸ்வின் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சாந்தினி (வயது 29). நிறைமாத கர்ப்பிணி. இவர் சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்வதற்காக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பத்தூர் ரயில் நிலைய மாஸ்டரான அஸ்வின்குமார் அழைத்துச்சென்றார்.
ரயில் அரக்கோணம் நிலையத்திற்கு வந்தபோது சாந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. இது குறித்து அஸ்வின்குமார் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில், அரக்கோணம் வந்ததும் சாந்தினியை கீழே இறக்கி பெண்கள் தங்கும் அறையில் அரக்கோணம் ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் பரமேஸ்வரி அழைத்துச்சென்றார்.
அங்கு பரமேஸ்வரி உதவியுடன் சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து சாந்தினி, அவரது ஆண் குழந்தையை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரசவத்திற்கு உதவியாக இருந்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் பரமேஸ்வரியை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். மேலும் திருப்பத்தூர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில் நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.