மணப்பாறை அடுத்த அதிகாரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள அதிகாரம் என்னுமிடத்தில் கார்த்திகேயன் என்பருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலை உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இந்நிலையில், ஆலையில் தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மஞ்சு, நார், தேங்காய் மட்டைகள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்புத்துறையினர்
இதையும் படிக்க | விண்ணப்பித்துவிட்டீர்களா..? மீன்வளத்துறையில் ஆய்வாளர் வேலை!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் முதற்கட்டமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அருகிலுள்ள மணப்பாறை, பொன்னமராவதி பகுதிகளிலிருந்தும் தீயணைப்புத்துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தனியார் தண்ணீர் லாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.