ஈரோடு: கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் பாரி சர்க்கரை ஆலைக்கு கடந்த 30 ஆண்டுகளாக கரும்பு வழங்கி வந்த விவசாயிகளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை உடன் இணைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயக் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, புகலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சண்முகராஜா பேசியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விஐடி பாரி நிறுவனத்திற்கு கரும்பு வழங்கி வந்தோம். நிறுவனம் முறையாக விவசாயிகளுக்கு பணம் வழங்கி வருகிறது. விவசாயிகள் வேளாண்மைக்கு செய்வதற்கு பல வகையில் உதவுகிறது.
ஆனால், திடீரென சக்கரை ஆணையர் கரும்பு வழங்கி வரும் சுமார் 3000 விவசாயிகளையும் அவர்களின் 5000 ஏக்கர் கரும்பு சாகுபடி பரப்பையும் சக்தி சர்க்கரை ஆலை உடன் இணைத்ததாக ஆணை பிறப்பித்துள்ளார்.
எழுமாத்தூரில் உள்ள சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வருவதில்லை. இங்கிருந்து கரும்பை அங்கு கொண்டு செல்லும் தூரம் அதிகம். அதனால் எரிபொருள் செலவு சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களை குறிப்பிட்டு இவ்வாறு செய்துள்ளதாக உத்தரவில் கூறியுள்ளார். ஏற்கனவே, இவ்வாறு மாற்றம் செய்ய முயன்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடையானை பெற்றிருந்தோம். பின்னர், உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆணையருக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, கடந்த மாதம் காணொலி காட்சி மூலமாகவும், நேரடியாகவும் விவசாயிகளை சர்க்கரை துறை ஆணையர் தொடர்பு கொண்டார். அப்போது அனைத்து விவசாயிகளும் சக்தி சர்க்கரை ஆலையுடன் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை கொடுத்துள்ளனர்.
சக்தி சர்க்கரை ஆலை கடந்த பல ஆண்டுகளாகளாகவே விவசாயிகளுக்கு கரும்பு வெட்டிய நிலுவைத் தொகையை முறையாக வழங்குமால் காலதாமதம் செய்துதான் வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் அந்த ஆலைக்கு கரும்பு வழங்க தயாராக இல்லை என்று தெரிவித்தோம்.
முதல்வர், வேளாண் துறை அமைச்சர், ஈரோடு ஆட்சியர், சக்கரைத் துறை ஆணையர் போன்ற பலருக்கும் இது குறித்து மனுக்கள் அனுப்பி உள்ளோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. ஆனால், சக்தி சர்க்கரை ஆலை எங்கள் பகுதியில் அலுவலகம் திறக்கவும், ஏற்கனவே உள்ள பாரி அலுவலகங்களை மூடவும் மிரட்டி வருகிறது. விவசாயிகள் அடிமைகள் அல்ல நாங்கள் விரும்புவோருக்கு தான் கரும்பு வழங்குவோம். சர்க்கரைத் துறை ஆணையர் உத்தரவு ரத்து செய்யாவிடில் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும் என்றார்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷ்னி சந்திரா, உங்கள் உணர்வுகள் அரசுக்கு தெரிவிக்கப்படும். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். அதன் பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.