கோவை கார் வெடிப்பு பதற்றத்துக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் இன்று தேவர் ஜெயந்தி கொண்டாட இருக்கும் நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கியுடன் இருவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையமான வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் நெல்லை மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
நெல்லை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக இங்கு இரவு முழுவதும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடுவதை முன்னிட்டு நள்ளிரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, இருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் பேருந்து நிலையத்தில் அமர்ந்துள்ளனர். உடனே அவர்களின் உடமைகளை வாங்கி சோதனை செய்தபோது உள்ளே துப்பாக்கி இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? கையில் ஏன் துப்பாக்கி எடுத்து வந்தார்கள் என்பது குறித்து மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையொட்டி போலீசார் பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில்m நெல்லை பேருந்து நிலையத்தில் இருவர் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது