மழை நீரில் மிதக்கும் நெல்மணிகள்... அறுவடை செய்தும் வேதனை தீரவில்லை: விவசாயிகள் வேதனை

அறுவடை செய்த நெல்லும் கொள்முதல் செய்யப்படாமல் மழை நீரில் நனைவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். 
கொள்முதல் செய்யப்படாமல் மழை நீரில் நனையும் நெல்மணிகள்
கொள்முதல் செய்யப்படாமல் மழை நீரில் நனையும் நெல்மணிகள்

கனமழையினால் பாதி அறுவடை செய்த நிலையில் மீதமுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் மழை நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு அறுவடை செய்த நெல்லும் கொள்முதல் செய்யப்படாமல் மழை நீரில் நனைவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது நடுவிக்கோட்டை கிராமத்தில் சுமார் 250 ஹெக்டர் நிலப்பரப்பில் சிறு, குறு விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து  நடுவிக்கோட்டை ஊராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு சுமார் 15,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் கடந்த 20 நாள்களாக நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு முன்பு வெட்ட வெளியில் போட்டுவிட்டு விவசாயிகள் இரவு - பகல் காவல் காத்து  வருகின்றனர். 

மேலும், கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பாதி அறுவடை செய்த நிலையில்  மீதமுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் மழை நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு அறுவடை செய்த நெல்லும் கொள்முதல் செய்யப்படாமல் மழை நீரில் நனைகின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். 

கஷ்டப்பட்டு கடன் வாங்கி உழைத்து பயிரிட்டு அறுவடை செய்த பின் அந்த நெல்லை விற்று கடனை அடைத்து விடலாம் என்று எண்ணிய எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.  இன்னும் சில நாள்கள் மழை நீரில் நெல் நனைந்தால் நெல் முளைத்து அழுகிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர். 

மேலும், தொடர்ந்து ஈரமாக இருந்தால் நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்ற அச்சமும் எங்களுக்கு உள்ளது. இதனால் நாங்கள் மேலும் கடனாளியாக ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏக்கருக்கு 25,000 வரை செலவு செய்துள்ளோம். ஆனால் செலவு செய்த தொகை கூட கிடைக்குமா என்ற நிலையில் விவசாயிகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.  எனவே அரசு உடனடியாக மழை நீரில் கிடக்கும் எங்கள் நெல்லை எந்த நிபந்தனைகளும் இன்றி கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், மழை நீரின் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com