தஞ்சாவூர்: டிடிவி தினகரன் உடல்நலக்குறைவால் தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த சில நாள்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்வாகிகள், உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதற்காக அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கிருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை மதியம் அல்லது மாலைக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.