மதுரையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்ததாதாக கூறி இளைஞரின் வீட்டின் முன்பாக தாலிக்கயிறுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட கோயில் பூசாரி திருநங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு கீழச்சின்னனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநிதி(33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக கோயிலுக்கு வந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (33) என்பவருக்கும் கோயில் பூசாரியான திருநங்கை ஸ்ரீநிதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து திருநங்கை ஸ்ரீநிதியுடன் சேர்ந்து தங்கதுரை கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீநிதிக்கு தங்கதுரை தாலி கட்டி திருமணம் செய்து வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் உறவு தங்கதுரை குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் ஸ்ரீநதியுன் நட்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இளைஞர் தங்கதுரைக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்.
அப்போது இளைஞர் தங்கதுரை பெற்றோரின் அழுத்தத்திற்காக திருமணம் செய்துகொள்வதாகவும் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் முடித்த ஒரு மாதத்தில் உன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதாகத் தெரிகிறது. இதற்கு திருநங்கை ஸ்ரீநிதி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இளைஞர் தங்கதுரைக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிக்க | பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
இதையடுத்து திருநங்கை ஸ்ரீநிதி தங்கதுரையை தொடர்பு கொண்டபோது செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். தொடர்ந்து பல முறை பேச முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் ஒரு மாதம் கடந்த பின்னரும் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய இன்றைய தினம் கையில் தாலியுடன் வந்து இளைஞர் தங்கதுரையின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இளைஞர் தங்கதுரை தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், தங்கதுரை வந்தால் மட்டுமே செல்வேன் எனக் கூறி திருநங்கை ஸ்ரீநிதி போராட்டம் நடத்திய நிலையில் பாலமேடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, பாலமேடு காவல்நிலையத்தில் திருநங்கை ஸ்ரீநிதி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 22 ஆம் தேதியன்று இளைஞர் தங்கதுரை மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கதுரையை தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கோயிலில் பூசாரியாக இருந்துவந்த திருநங்கை ஸ்ரீநிதியை ஏமாற்றிய இளைஞர் தங்கதுரையை மீட்டுத்தரக் கோரி திருநங்கை நடத்திய தர்னா போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.