மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா: மு.க. ஸ்டாலின்

நெல்லையில் சுற்றுலாவை மேம்படுத்த மணிமுத்தாறில் 7 கோடி ரூபாய் மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா: மு.க. ஸ்டாலின்
மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா: மு.க. ஸ்டாலின்

நெல்லையில் சுற்றுலாவை மேம்படுத்த மணிமுத்தாறில் 7 கோடி ரூபாய் மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். மாநகர மக்களின் நலனுக்காக 370 கோடி ரூபாயில் மாநகர மேற்கு புறவழிச்சாலை மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும் என நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று 156.28 கோடியில் 727 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 74.24 கோடியில் முடிவற்ற 29 திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 117.78 கோடி ரூபாயில் 30,658 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,
நிகழ்ச்சியில் அவைத் தலைவர் நன்றாக பேசினார். ஆனால் சுருக்கமாக பேசவில்லை. இருப்பினும் அவர் கூறிய கருத்துகள் நன்றாக இருந்தது. வீரத்தின் விளைநிலமான திருநெல்வேலியில் பேசுவதால் பெருமை அடைகிறேன். புலவர்களால் பாராட்டப்பட்ட ஊர். தமிழகத்திலேயே அதிக கல்வி நிறுவனங்கள் முதலில் உருவான ஊர் நெல்லை தான். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு நகரம் இது.

நெல்லையப்பர் கோயிலின் குடமுழுக்கை கருணாநிதி சிறப்பாக நடத்தி வைத்தார். 1973ம் ஆண்டு இங்கு ஈரடுக்கு பாலத்தை அமைத்து அதற்கு திருவள்ளுவர் பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கருணாநிதி.

இத்தகைய சிறப்பு மிக்க மாவட்டத்தில் விழா நடந்து வருகிறது. இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் இரட்டை குதிரை வேகத்தில் செயல்படுகிறார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தாலும் நெல்லையை தொல்லை என நினைக்காமல் தனது எல்லையாக நினைத்து செயல்படுகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் திமுக ஆட்சி, மக்களுக்கு மிக மிக பலனுள்ளதாக உள்ளது. 1113 பேர் இன்னுயிர் காக்கும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்

கூட்டுறவு சார்பில் 9389 விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 20 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 54917 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மகளிர் இலவச பயண திட்டத்தில 6 கோடி 92 லட் மகளிர் இதுவரை பயன்பெற்றுள்ளனர். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 3421 பேர் நெல்லையில் பயன் பெற்றுள்ளனர்.

156 கோடி 28 லட்சல் மதிப்பில் இன்று 727 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். 74.24 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 30658 பயனாளிகளுக்கு 117.78 கோடி மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

பொருநை நாகரீகம் தோன்றிய நகரம் இது. எனவே அதை போற்றும் வகையில் 15 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதியின் கனவு திட்டமான தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2009ல் துணை முதல்வராக இருந்தபோது 369 கோடிக்கு  கருணாநிதி முதல்கட்டமாக நிதி ஒதுக்கினார். கடந்த பத்து ஆண்டுகளாக அதில் எந்த பணியும் இல்லாமல் கிடப்பில் போட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டேன். எனவே வரும்  2023க்குள் அத்திட்டம் முடிக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதன் மூலம் நெல்லை. தூத்துக்குடியில் 20,340 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.
 
திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மணிமுத்தாறில் சுற்றுச் சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 7 கோடி ரூபாய் மதிப்பில் பல்லூயிர் சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கப்படும். வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். கடற்கரை கிராமத்தில் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலைக்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. 370 கோடியில் மூன்று கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். தமிழகத்திலையே முதல் முறையாக நெல்லையில்  கர்ப்பிணி பெண்களுக்காக தாய் கேர் திட்டம் கொண்டுவரப்பட்டது நெல்லையில் தான்.

என்னை பொறுத்தவரை பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்கக் கூடாது. அதனால் தான் உங்கள் தொகுதி முதல்வர் திட்டத்தை தொடங்கினேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது.

தமிழக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் இந்தியா முன்மாதிரி திட்டமாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். எனவே நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அப்பாவு, கே.என்.நேரு, எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com