கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களின் கருத்துகளை கேட்டறிந்து அறிக்கை எப்போது தாக்கல் செய்ய முடியும் என 2 வாரத்தில் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கூடங்குளம் அணு உலை மையத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகள் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்கும் விவகாரத்தில் மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாச நீட்டிப்புக் கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கலான மனு மீது எதிா்மனுதாரரான ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கூடங்குளம் அணுஉலை தொடா்பாக ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அதில், 15 நிபந்தனைகளை விதித்து அணு உலை செயல்பட அனுமதி அளித்தது.
அதில் முக்கியமான நிபந்தனையாக அணுக் கழிவுகளை நிரந்தரமாக பாதுகாத்து வைப்பதற்கான ஆழ்நில கழிவு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அதுவரை அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது குறிப்படத்தக்கது.