நாகர்கோவில்: நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எனது கோரிக்கைகளை ராகுல் காந்தி கவனமாக கேட்டுக் கொண்டார் என்று அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைப் பயணத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது, மணிரத்தினம், ராகுல் காந்தியிடம் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது குறித்த கோரிக்கை மனுவையும் ராகுலிடம் அளித்தார்.
பின்னர் மணிரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்குவதை அறிந்து அவரை சந்திக்க இங்கு வந்தேன். அவரிடம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன்.
மேலும் கடந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். அதை அவரிடம் நினைவூட்டினோம். நாங்கள் சொன்னதை அவர் கவனமாக கேட்டு கொண்டார்.
இந்த நடைப்பயணத்தின் போது அவரை சந்தித்து நீட் தேர்வுக்கான விலக்கு கோரிக்கையை வலியுறுத்தியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது என்றார்.