எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க- க்யூட்-இளநிலை தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15-ல் வெளியீடு
அப்போது வேலுமணி தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர்நீதிமன்றம் தற்போது விசாரிப்பது சரியாக இருக்காது என தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்குகளை செப்.19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அத்துடன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.