சேலம்: சேலத்தில் சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை சீரழித்த வழக்கில் போலி இயக்குநருக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வேல் சத்ரியன். இவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நூற்றுக்கு மேற்பட்டோர்களிடம் பணம் வசூல் செய்ததோடு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வந்ததாக கூறப்பட்ட புகாரில் பேரில், சேலம் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரது உதவியாளரான ஜெய ஜோதி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
ஜெயஜோதியை மூன்று நாள்கள் காவலில் எடுத்து காவல் துறை விசாரணை நடத்தினர். இதனையடுத்து விசாரணைக்கு பிறகு அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கும், வேல் சத்ரியனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும், யாரிடம் எல்லாம் அவர் பாலியல் தொந்தரவு செய்தார் என்பது குறித்தும் தெளிவாக காவல்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனக்கு சம்பளம் கிடையாது என்றும், ஊருக்கு போகும் போது மட்டும் செலவுக்கு மட்டும் பணம் தருவார் என்றும், ஒரு முறை எடப்பாடியில் உள்ள அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் என கூறி இருந்தார்
இதைத்தொடர்ந்து இயக்குநர் வேல் சத்ரியனையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சூரமங்கலம் உதவி ஆணையாளர் நாகராஜனை காவல் ஆணையாளர் நியமித்துள்ளார்.
காவல்துறையினரின் மனுவை விசாரித்த நீதிமன்ற நடுவர் தினேஷ்குமார் இயக்குனநர் வேல் சத்திரியனை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதனையடுத்து உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் வேல் சத்ரியினை ரகசிய இடத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: எமரால்டு அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இந்த விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.