திமுக துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜிநாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவின் கழக அமைப்பு ரீதியிலான அனைத்து இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிந்தவுடன் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில், துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி அறிவிக்கவும் திமுக திட்மிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதை அடுத்து சுப்புலட்சுமி திமுக துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மூலம் 1977 இல் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்ஜிஆர் மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்ஜிஆர் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். 1980 இல் திமுகவில் இணைந்து 1984 இல் திமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று கருணாநிதி அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1991 இல் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2001 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக இருந்தார்.