திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை பாஜக தலைவர் உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்து காவல் நிலையம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை பீளமேடு பகுதியில் சமீபத்தில் முந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், நீலகரி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடங்கியது!
இதுகுறித்து விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து த.பெ.தி.க.வினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமியை போலீசார் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்தனர். இதையறிந்த பாஜகவினர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து உத்தம ராமசாமியை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.