/

அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு தொடங்கியது!

தமிழக அரசின் விரைவுப் பேருந்துகளில் தீபாவளிக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:23 am

DIN

தமிழக அரசின் விரைவுப் பேருந்துகளில் தீபாவளிக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதி(திங்கள்கிழமை) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து பணிபுரிந்து வந்ததால், சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. ஆனால், இந்தாண்டு மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் முக்கிய நகரங்களுக்கு பணிக்கு திரும்பியுள்ளதால், பண்டிகைக்கு ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்ககூடும்.

சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கான ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்த நிலையில், விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய லட்சக்கணக்கான பயணிகள் காத்துள்ளனர்.

தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு முன்பு பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் நிலையில், அக். 21ஆம்(வெள்ளிக்கிழமை) தேதிக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

அக். 22 சனிக்கிழமைக்கான முன்பதிவு நாளையும், அக். 23 ஞாயிற்றுக்கிழமைக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கவுள்ளது.

மேலும், தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவுகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.