கோவை: சுகாதார அலுவலகத்திற்கு வந்த திமுக கவுன்சிலரின் கணவர், சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு மேற்கொண்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி 61-வது வார்டு உறுப்பினர் ஆதி மகேஸ்வரி. இவரது கணவர் திராவிட மணி, நேற்று காலை 6 மணியளவில் சுகாதார அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு செய்துள்ளார்.
மேலும், சுகாதாரப் பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், பணியாளர்கள் எந்தெந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்று தனக்கு தெரிவிக்குமாறும், நான் சொல்லும் பணிகளைதான் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர் கூறுகையில்,
இவர் யார் என்று சுகாதார பணியாளர்களுக்கு தெரியவில்லை. இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை? இவர் சுகாதார ஆய்வாளரா? இல்லை மண்டல ஆய்வாளரா? இல்லை உதவி ஆணையாளரா?.. எங்களிடம் அதிகார தோரணையில் நடந்த கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் இதில் தலையிட்டு, நூறு வார்டுகளிலும் இந்த நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தனர்.
இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.