திருப்பூர்: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையில் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பழையகோட்டை கிராமம் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதே வேளையில், அரசு பாதுகாப்புப் பணிக்கான அரசு அலுவல்களைக் கவனிக்கும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.