விருதுநகர்: ஆடி மாத அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாள்களுக்கு அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) முதல் நான்கு நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சதுரகிரி மலை அருகே சாப்டூா் வனச் சரகம் 5-ஆவது ‘பீட்’ ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோயில் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலையில் காட்டுத் தீ ஏற்பட்டது.
சுமாா் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போதிலும், பலத்த காற்று வீசி வருவதால் தீ பரவி வருகிறது.
இதனால், பக்தா்களின் பாதுகாப்புக் கருதி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்படுவதாகவும், தீ அணைக்கப்படும்பட்சத்தில், இனி வரும் நாள்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜூலை 31) முதல் புதன்கிழமை (ஆக. 2) வரை 3 நாள் மட்டும் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆடி மாதப் பௌா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில் ஆடி மாத அமாவாசையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாள்களுக்கு அனுமதி வழங்கி மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை (ஆக.12) முதல் வியாழக்கிழமை (ஆக.17) ஆறு நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.