திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் சென்னை பல்கலை.யின் 165ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை பல்கலை.யில் பயின்ற 762 பேர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பட்டம் பெற்றனர்.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் உட்பட பல தலைசிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார்.
இன்று முதல்வராக உங்கள் முன் உரையாற்றும் நானும் இதே பல்கலைக்கழகத்தை சார்ந்தவன் தான். அந்த வகையில் உங்கள் சீனியராகவும் நான் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ளேன். கடந்த 165 ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
அந்தக் காலத்தில் இருந்தது சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும்தான். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் சென்னைக்கு வெளியே சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பள்ளிக் கல்வியை வளர்த்தார் பெருந்தலைவர் காமராசர். கல்லூரிக் கல்வியை கலைஞர் விரிவு செய்தார். இன்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
ஆராய்ச்சிக் கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தனி திறமையானவர்களாக வளர்த்தெடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.