தஞ்சாவூர்: நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் நிலையத் திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வந்த நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் நிலைய திட்டத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திட்டங்களை தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசுகையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு எந்தத் திட்டங்களையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.
இதனால் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிக்க: மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் பலி
இதையடுத்து ரயிலடி முதன்மைச் சாலைக்கு சென்ற பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.