தம்மம்பட்டி: ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாகக் கூறி, ரூ.5.26 கோடி மோசடி செய்த புகாரில், தம்மம்பட்டியில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சாந்தகுமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உலிபுரத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (48). இவர், தம்மம்பட்டி திருச்சி மெயின்ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்திவந்தார். இவருடன், தம்மம்பட்டி செந்தாரப்பட்டி சாலையில் சேகோ மில் நடத்தி வரும் தேவராஜன் (45) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. சாந்தகுமார், அவரிடம் ஷேர்மார்கெட்டில் பணம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என கூறிவந்துள்ளார். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு நான் முழுபொறுப்பு என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய தேவராஜன், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல தவணைகளில் ரூ.65 லட்சத்து 78 ஆயிரத்து 499-ஐ சாந்தகுமாரிடம் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம், ஷேர்மார்க்கெட் தொழில் தொடர்பாக மும்பைக்கு பயிற்சிக்கு செல்வதாகக் கூறி, தேவராஜனிடம் ரூ.1 லட்சத்தை வாங்கிச் சென்றார். அதன் பின் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. அவரது ஜெராக்ஸ் கடையும் பூட்டிக்கிடந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தேவராஜன், மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான சாந்தகுமார் குறித்து விசாரித்து வந்தனர்.
இதையும் படிக்க | இந்தியா-பாக். ஹாக்கி: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இந்தநிலையில், ஆக. 7 ஆம் தேதி நள்ளிரவில் உலிபுரம் கிராமத்தில், உடல்நலமின்றி இருக்கும் தனது. அம்மாவை பார்க்க, ரகசியமாக சாந்தகுமார் வந்தார். இந்த தகவலையடுத்து, ஆக.8 ஆம் தேதி விடியற்காலை அங்கு சென்ற தேவராஜன், அவரைப் பிடித்து, குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், 15 பேரிடம், ரூ.5 கோடியே 26 லட்சத்து 76 ஆயிரத்து 899 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. வங்கி மூலமாகவும், நேரடியாகவும் அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார்.
இதையடுத்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, செவ்வாய்க்கிழமை இரவு சாந்தகுமாரை கைது செய்து, சேலம் 6 ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.