நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மாணவியின் பெற்றோர், 'நீட் தேர்வுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?' என்று கேட்க, 'நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதல்வர் அறிவிப்பு
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுதந்திர நாள் விழாவினையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அந்த கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசனும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.