கன்னியாகுமரியிலிருந்து நடைப்பயணத்தைத் துவங்கினார் அண்ணாமலை
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தனது நடைபயணத்தை செவ்வாய்க்கிழமை துவங்கினார் பாஜக தலைவர் அண்ணாமலை.
என் மண், என் மக்கள் என்ற பிரசாரப் பயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் 17 ஆவது தின நடைப்பயணத்தை கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் இருந்து காலை 10.30 மணியளவில் துவங்கினார்.
தொடர்ந்து படந்தாலுமூடு, திருத்துவபுரம் வழியாக குழித்துறையில் நடைப்பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். முன்னதாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்ட அண்ணாமலையுடன் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தற்படம் (செல்பி) எடுத்துக் கொண்டனர். களியக்காவிளையில் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நடைப்பயணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏ சி. வேலாயுதம், மாவட்ட பாஜக தலைவர் சி. தர்மராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் கிள்ளியூர் தொகுதியில் நடைப்பயணம் துவங்கும் அவர் வெட்டுவெந்நியில் துவங்கி இரவிபுதூர் கடையில் நிறைவு செய்கிறார்.