தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.18) அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக.18) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து ஆக.23-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.18) ஓரிரு இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும், சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. தியாயகராய நகா், கோபாலபுரம், திருவான்மியூா், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, சேப்பாக்கம், மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.