ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு பயனமாக வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், வெள்ளிக்கிழமை பேய்க்கரும்பில் உள்ள மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பேராவூா் பகுதியில் தென் மாவட்ட அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம், மண்டபத்தில் மீனவா் நல மாநாடு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மதுரையிலிருந்து காரில் ராமநாதபுரத்துக்கு வந்தாா்.
அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பேராவூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திமுகவினருக்கு அறிவுரைகள் வழங்கினார். முதல்வருக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவச் சிலையுடன் பேனா இணைந்த நினைவுப் பரிசை காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வழங்கினாா்.
கூட்டம் நிறைவடைந்தவுடன் ராமேசுவரத்துக்குச் செல்லும் வழியில் அக்காள் மடம் பகுதியில் மீனவா்களை முதல்வா் சந்தித்துப் பேசினாா்.
பின்னா், பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் விடுதிக்கு முதல்வா் சென்றாா்.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ராஜகண்ணப்பன், கனிமொழி எம்.பி. ஆகியோர் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முதல்வா் வருகையை முன்னிட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.