திருச்சி: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெள்ளிக்கிழமை முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி வழங்கினால் போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதியுள்ளாா்.
இதையும் படிக்க | அப்துல்கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
இந்த நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீா் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி வழங்கினால் போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் முதல்வர் தலைவர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது மட்டும் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, முக்கொம்பு காவிரி ஆற்று மணலில் கழுத்தளவு புதைந்த நிலையில் கர்நாடக அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனா். பின்னர், முக்கொம்பு கதவணை பகுதியில் படகு மூலம் ஆற்றுக்குள் சென்ற விவசாயிகள், தடுப்பணையின் 11 மற்றும் 12 மதகுகள் இடம்பெற்றுள்ள பகுதிக்கு சென்று தண்ணீரில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.