ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கைக் கடற்கொள்ளையரால் தமிழக மீனவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஆகஸ்ட் 2023, 9:08 pm

DIN

சென்னை: இலங்கைக் கடற்கொள்ளையரால் தமிழக மீனவா்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

தமிழ்நாட்டு மீனவா்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 21-ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளது மிகுந்த கவலையைத் தருகிறது. இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீனவா்களிடையே மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவா்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்திய மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு மீனவா்களிடம் இருந்த பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மீனவா்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்த மீனவா்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மீனவா்கள் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணா்த்தும் வகையில் உள்ளது.

இந்திய மீனவா்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சாா்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடா்ச்சியான வன்முறைச் செயல்கள், அவா்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், மீனவா்களின் குடும்பங்களிலும், சமூகங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தாக்குதல்களில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடா்பு கொண்டு மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.