கோவை: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை காலை பல்கலைக்கழக உஷா கீர்த்திலால் மேத்தா பேரவை அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டம் வழங்குகிறார். உயர் கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான க.பொன்முடி, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் மசோதாக்களை திருப்பி அனுப்பி வரும் ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டனம் தெரிவித்துள்ள முற்போக்கு அமைப்புகள், கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர் .
அதன்படி, கோவை லாலி ரோடு சந்திப்பு பகுதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலையரசன், கோவை குரு, ஆதித் தமிழர் பேரவையின் ரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சியின் வெண்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணியின் மலரவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நேருதாஸ் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 75 பேர்களை போலீசார் கைது செய்தனர்.