அகில இந்திய சைனிக் பள்ளிகளில் 6, 9-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கபட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனன் 1961 -ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேருவதற்கு தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. தற்போதும் மேலும் சில பள்ளிகளை தொடங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது
சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவது பள்ளியின் நோக்கமாகும்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது அமராவதி சைனிக் பள்ளி. இந்தப் பள்ளியானது இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப் (Boarding school) பள்ளியாகும்.
இது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் அமராவதி சைனிக் பள்ளியும் ஒன்று.
இந்த நிலையில், அகில இந்திய சைனிக் பள்ளிகளில் 6, 9-ஆம் வகுப்பு 2024-25 -ஆம் ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 6, 9-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு 2024 ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் வழியாக டிச.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதர பிரிவினர் ரூ.650. இதனை இணையவழியில் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து முழுமையான விவரங்களை www.nta.ac.in அல்லது https://exams.nta.ac.in/AISSEE/images/FAQ-Gen.pdf இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.