காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடர் கன மழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மிக்ஜம் புயல் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும்,மசூலிப்பட்டிணத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பல இடங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனத்த மழைப் பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.
அந்த வகையில் நான்கு மாவட்டங்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு திங்கள்கிழமை(டிச.4) பொது விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில்,
பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் 90 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 88 மில்லி மீட்டர்,வாலாஜாபாத்தில் 81 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 132 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 120 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 162 மில்லி மீட்டர் எனவும், மாவட்டத்தில் சராசரியாக 112 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | ஆம்பூரில் மின்வேலியில் சிக்கி இருவர் பலி
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் சுற்று பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது.
ஏரியின் நீர் இருப்பு தற்போது 21 அடியாகவும்,நீர்வரத்து 6,881 கன அடியாகவும்,ஏரியிலிருந்து 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் புயல் மற்றும் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 முகாம்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்த 672 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை ஏழு கால்நடைகள் உயிரழந்துள்ளது,ஒரு குடிசை வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் மற்றும் மாகரல் அணைக்கட்டுகளில் இருந்து 3,450 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோன்று உத்திரமேரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மூன்று கலங்கள் வழியாக 837 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.