வேளாண் பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை பாதிப்பிற்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்துள்ளதாவது:
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட தொடர் பெருமழையினாலும்; வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட அனைத்து வகை சேதாரங்களுக்கும்... பேரிடர் வரன்முறையை தாண்டி நிவாரணத்தை உயர்த்தி வழங்கிட அறிவித்துள்ள தமிழக அரசை பாராட்டுகிறோம்.
குறிப்பாக 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிப்பிற்குள்ளான நெல்பயிர்களுக்கு ரூ.13500 என்பதை ரூ.17000 ஆகவும்; நீண்டகால பயிர்களுக்கு ரூ.18000 இல் இருந்து ரூ.22,500 ஆகவும்; மானாவாவரி பயிர்களுக்கு ரூ7,410 என்பதை ரூ.8,500 எனவும்... இதுபோல் பிற பாதிப்புகளுக்குரிய நிவாரணமும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உச்ச நீதிமன்றத்தின் 370 நீக்கம் பாஜகவின் அரசியல் சூதாட்டம்: கருணாஸ் கண்டனம்
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நெற்கதிர்கள் வெளிவரும் முதிர்ந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.சூல் கட்டும் பருவத்தில் உள்ள பயிர்களில் நெல்மணிகள் உருவாகாமல் பதராகத்தான் இனி வெளிவரும்.கதிர் வந்தாலும் உதிர்ந்தும் பதராகியும் விடும்.மானாவாரி புஞ்சை பயிர்களும் பல இடங்களில் மூழ்கி அழுகிவிட்டது.ஒரு ஏக்கர் நெல் பயிர் சாகுபடி செலவில் நான்கில் ஒரு பங்கே இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இது உரிய நிவாரணம் இல்லை.
எனவே, நெல் பயிர் இழப்பிற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம்; மானாவரி குறுகிய கால பயிர்களுக்கு ரூ. 15 ஆயிரம் என உயர்த்தி வழங்கிட வேண்டுமென மாசிலாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.