யார், யாருக்கு ரூ.6 ஆயிரம்: தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னையில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read


சென்னை: சென்னையில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை தொடர்பான சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், நிவாரணப் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை அனைவருக்கும், அதாவது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும். டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும். அடுத்த 10 நாள்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், திருவள்ளூர் உள்ளிட்ட இதர மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட வட்டங்கள், பாதிக்கப்பட்ட தாலுகாக்கள் என கணக்கெடுத்து நிவாரண தொகை வழங்கப்படும். காஞ்சிபுரம் என்று எடுத்துக் கொண்டால், எத்தனை வட்டங்கள் பாதிக்கப்பட்டன, எத்தனை தாலுகாக்கள் பாதிக்கப்பட்டன என்பதை கணக்கெடுத்து, அந்த தாலுகா மற்றும் வட்டங்களில் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.

தற்போதைக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை குடும்ப அட்டை அடிப்படையில்தான் கணக்கெடுத்துள்ளனர். குடும்ப அட்டை இல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசுக்கு முறையீடு செய்து பெறலாம் என்றும் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.

வெள்ள பாதிப்பு நிலவரம் தொடர்பாக முதற்கட்டமாக தமிழகத்தில் ரூ.5,068 கோடி கணக்கெடுத்துள்ளோம்.   மத்தியக் குழு நாளை வருகிறார்கள். தமிழகத்தில் நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் குழுவினரிடம் இறுதி அறிக்கை அளிக்கப்படும்.

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து உயிர்ச்சேதத்தை தவிர்த்திருக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் அவதூறு பிரசாரம் செய்கிறார்கள்.  முதல்வரே நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அமைச்சர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். 

சென்னையில் புயல் பாதிப்பு வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் சேலத்தில் இருந்தார். தமிழகத்துக்கு வரும் மத்தியக் குழுவினரிடம், உரிய நிவாரணத் தொகை வழங்குமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அழுத்தம் கொடுக்கலாமே என்றும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com