கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதா நீர்மட்டம் இரண்டாவது முறையாக 136 அடியை எட்டியது.
அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 82.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 108.0 மி.மீ., மழையும் ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் பெய்தது. இதனால் அணைக்குள் திங்கள்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 5,987 கன அடி தண்ணீர் வந்தது. அதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 136.50 அடியாக உயர்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 135.95 அடி உயரமாக இருந்தது, திங்கள்கிழமை 136.50 அடியை எட்டியது, அதாவது ஒரேநாளில் 1.50 அடியை எட்டியது.
அறிவிப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு 136.50 அடி உயரத்தை எட்டியதை அணையின் உதவி பொறியாளர் எம்.நவீன்குமார் அறிவித்துள்ளார்.
3-ஆவது முறையாக 136 அடி
கடந்த நவ.24 -இல் அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தது, அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் வினாடிக்கு 1,500 கன அடி திறக்கப்பட்டது, அதன்பின்னர் டிச. 10 -இல் மீண்டும் 136 அடியை எட்டிய நிலையில், திங்கள்கிழமை அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அணையின் நீர்மட்டம்
திங்கள்கிழமை கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 136.50 அடியாகவும், நீர் இருப்பு 6,244 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 5987.34 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,500 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 82.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 108.0 மி.மீ., மழையும் பெய்தது.
மின்சார உற்பத்தி
முல்லைப்பெரியாறு அணையில் வெளியேற்றப்படும் தண்ணீர் நவ. 24 முதல் திங்கள்கிழமை வரை வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்ததால், 24 நாட்களாக, தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் சுருளி மலையில் அமைந்துள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, திங்கள்கிழமையும் தொடர் வெள்ளம் ஏற்பட்டது, அதன் காரணமாக ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அருவியின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.