தமிழகத்தின் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று போல் மழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
மழை குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்னும் பிரதீப் ஜான், இன்று தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். மற்ற அருகிலுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
இதையும் படிக்க.. தமிழகத்தில் இரண்டு மடங்கானதா கரோனா பாதிப்பு?
நேற்று போல் மழை பெய்யாது, ஆனால் இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று நேற்று போல் மழை பெய்யாது என்று கூறி அச்சத்தைப் போக்கி, இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஒரு எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
முன்னதாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், குமரிக் கடல், அதையொட்டிய பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தில் செவ்வாய் முதல் சனி (டிச.19-23) வரை ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.