தூத்தூக்குடி: விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியல் போக்கே மாறியிருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் என்றாலே அச்சமின்மை, துணிச்சல். எதற்கும் பயப்படாதவர். தவசி படத்தில் பணியாற்றும்போதுதான் அவரோடு மனம்விட்டு பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. அப்போதில் இருந்து தான் நெருக்கமான பழக்கம். அவரைப்போன்ற சிறந்த மனிதர் கிடைப்பது அரிது.
அவரை போன்று நடிப்பதற்கு ஆட்கள் வரலாம், சண்டை போடுவதற்கு கூட ஒருவர் வரலாம். ஆனால், அவரைப்போல சிறந்த மனிதர் ஒருவர் வருவது ரொம்ப கடினம்.
திரையில் இருந்துகொண்டு புகழின் உச்சியில் இருந்தபோதும் அதை தலையில் ஏற்றிக்கொள்ளமால் பார்த்துக் கொண்டவர் விஜயகாந்த்.
அனைவரோடும் சமமாக பழகக்கூடியவர். அப்படியொரு மனிதர் திரையுலகில் இருந்தார் என்றால் அவர் விஜயகாந்த் மட்டுமே. அவரை இழந்திருப்பது என்பது மிகுந்த கவலையாக உள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரிய அரசியல் ஆளுமைகள் இருக்கும்போதே அரசியலுக்கு வந்து 10.5 சதவிகித வாக்குகள் வாங்கி எதிர்க்கட்சித் தலைவராகி திராவிடத்தை தனது பேச்சால் மிரள வைத்து மாமனிதனாக வந்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல.
இவ்வளவு நாள் விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியல் போக்கே மாறியிருக்கும். அவர் ஒரு ஆகச் சிறந்த மனிதர், எளிமையாளர், பண்பாளர்.
விஜயகாந்தை பேச பழகுவதில் ஒரு குழந்தை, கம்பீரமும், கருணையும் கொண்டவர் என சீமான் தெரிவித்தார்.